இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல்
இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அனுராதபுரம் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கிய பஸ் வெடித்து சிதறியதில் 64 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனைக்குரியது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதை நம்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனால் இலங்கை அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக தமிழர்கள் வாழும் பகுதியில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது எந்த நாகரீக அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையாகும்.
விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உறுதி. இதனால்தான் காஷ்மீரில் எவ்வளவு வன்முறைகள் நிகழ்ந்தாலும் இந்திய அரசு விமானப்படையை பயன்படுத்துவது இல்லை.
1958-ல் சிங்கள ஆட்சி மொழி கலவரத்தின் போது அன்றைய பிரமதர் நேரு இந்திய கப்பலை அனுப்பி கொழும்பிலிருந்து தமிழ் மக்களை மீட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தார். 1983-ல் சிங்களர்களால் தமிழின படுகொலை நடைபெற்றபோது இந்திய அரசு கப்பல்கள் மூலம் அகதிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதுபோன்று இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு உதவ மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லையெனில் ஆதரவற்ற இலங்கை தமிழர்களுக்கு உதவ தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.