5 வருடங்களாக சம்பளம் இல்லை: 9 வருடங்களாக சவுதியில் குணவதிக்கு வீட்டு சிறை
சவுதி அரேபிய, ரியாத் நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் 5 வருடங்களாக சம்பளம் வழங்கப்படாது, 9 வருடங்களாக இலங்கைக்கு அனுப்பாது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
43 வயதான குணவதி என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பணி புரிவதற்காக சென்ற வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது 6 பிள்ளைகளால் இப்பெண் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பணியாளர்களது கடவுச்சீட்டு புதுப்பிக்கும் நடவடிக்கைளை சவுதியிலுள்ள இலங்கை தூதுவராலயம் மேற்கொள்வது வழமை. இவ்வாறான சந்தர்ப்பத்தின்போதே குவதியின் துன்பங்கள் தெரியவந்துள்ளதாக தூதுவராலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக குணவதி செல்லாது அவரது வீட்டு உரிமையாளரே சென்றுள்ளார்.
இதன்போது தூதரக அதிகாரிகள், கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாது எனவும் கடவுச்சீட்டின் உரிமையாளர்கள் வரும் பட்சத்திலேயே புதுப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குணவதிக்கு தொழில் பெற்றுக் கொடுத்த முகவர் நிலையத்தை தூதுவராலயம் தொடர்பு கொண்டு இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இதன்போது, குறித்த பெண்ணிற்கு சம்பளம் கொடுக்காமை, வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமை, துன்புறுத்தப்படுகின்றமை போன்ற தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னதாக தூதரக அதிகாரிகள் சவுதி அரேபிய ஊடகம் ஒன்றின் மூலமாக இந்த சம்பவம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கை பணிப் பெண்கள் இவ்வாறு பல துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating