ஆணாக உணர்ந்த பெண்ணும், பெண்ணாக உணர்ந்த ஆணும் அதிசய திருமணம்
அர்ஜென்டினாவில் மாற்றுப் பாலினத்தார் அதிகரித்து வருவதை அடுத்து அவர்கள் தங்களை எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனரோ, அந்த பாலினத்தைச் சேர்ந்தவராக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு 2010ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து மாற்றுப் பாலினத்தாரின் மிகப் பெரிய பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் விக்டோரியா நகரில் ஆணாக மாறியுள்ள பெண்ணும், பெண்ணாக மாறியுள்ள ஆணும் சட்டப்படி திருணம் செய்துள்ளனர். இந்த தம்பதியில் தற்போது ஆணாக மாறியுள்ள பெண் 36 வார கர்ப்பிணியாக உள்ளார்.
அதாவது மணமகன் கர்ப்பமாக உள்ளார். விக்டோரியாவைச் சேர்ந்தவர் அலெக்சிஸ் தபோர்தா. இயற்கையில் பெண்ணாக பிறந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன், தன்னை ஆணாக உணர்ந்தார். இதையடுத்து, அந்நாட்டின் அரசாங்கப் பதிவேட்டில், தன் பாலினத்தை ஆண் என, பதிவு செய்தார்.
அதே போல் இயற்கையில் ஆணாக பிறந்த காரேன் புருசாலிரியோ, தன்னை பெண்ணாக உணர்ந்த காரணத்தால் தன் பாலினத்தை பெண் என பதிவு செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இருவரும் திருமணம் செய்யவும் முடிவு செய்தனர். எனினும், இருவரும் திருமணத்திற்கு முன் உறவு கொண்டதில் அப்போது பெண்ணாக இருந்து தற்போது ஆணாக மாறியுள்ள, அலெக்சிஸ் தபோரா, கர்ப்பம் அடைந்தார்.
எனினும், இவர்கள் இருவரும் தங்களை மாற்றுப் பாலினத்தினராக உணர்ந்தாலும், இருவரும் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போது ஆணாக மாறி திருமணம் செய்துள்ள அலெக்சிஸ், 36 வார நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு, விரைவில் பிரசவம் நடைபெற உள்ளது. ஸ்கேன் மூலம், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட இத்தம்பதி, அதற்கு தற்போதே பெயர் சூட்டிவிட்டனர்.
சட்டப்படி திருமணம் செய்தாலும், சம்பிரதாயப்படி திருமணம் செய்ய விரும்பும் இவர்கள், அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தேவாலய பேராயருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பேராயரின் அனுமதி கிடைத்ததும், சம்பிரதாய முறைப்படி, இந்த தம்பதி மீண்டும் திருமணம் செய்யவுள்ளனர்.
Average Rating