லண்டன் – துபாய் விமானத்தில் பயணி அட்டகாசம்!
லண்டனில் இருந்து நேற்று (திங்கள்) மாலை துபாய் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ‘அட்டகாசம்’ செய்ததால், விமானம் மீண்டும் திரும்பி லண்டன் சென்று தரையிறங்கியது. அட்டகாசம் செய்த பயணியை, விமான ஊழியர்கள் 6 பேராக சேர்ந்து அமுக்கி, அடக்கி, சீட்டில் கட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குவான்டஸ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் லண்டனில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து சிட்னி செல்வதற்காக கிளம்பியது. விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரம் வானில் பறந்தபின், விமானத்தில் உணவு பரிமாற தொடங்கினார்கள். அப்போது ஏர்பஸ் A380 விமானத்தின் மேல்தட்டில் இருந்த பயணி அட்டகாசம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அப்படி என்ன அட்டகாசம் செய்தார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
குறிப்பிட்ட பயணியுடன் விமானத்தை தொடர்ந்து செலுத்துவது மற்றைய பயணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதிய விமானி, விமானத்தை மீண்டும் லண்டனை நோக்கி திருப்ப அனுமதி கேட்டார். அதையடுத்து விமானம் மீண்டும் ஒரு மணி நேரம் பறந்து லண்டனுக்கு வந்து தரையிறங்கியது.
லண்டனில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ‘அட்டகாச’ பயணியை கைது செய்து, மற்றைய பயணிகளிடம் இருந்து சாட்சியங்களையும் பதிவு செய்தபின், விமானம் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. துபாயில் விமானம் இன்று (செவ்வாய்) மதியம் 12.50க்கு தரையிறங்கும்.
Average Rating