வல்வெட்டித்துறை நகரசபை நிதிமோசடி குற்றச்சாட்டு: வரவு – செலவுத்திட்ட எதிர்ப்பின் எதிரொலி?!
வல்வெட்டித்துறை நகரசபை பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை குத்தகை மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.
இந்த நிதி மோசடி குறித்து, நகரசபை உறுப்பினர் கே.கருணானந்தராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
குறித்த சிற்றுண்டிச்சாலை குத்தகையை சனசமூக நிலையத்திற்கு வழங்க வல்வெட்டித்துறை நகரசபையில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அதன் பின்னதாகவே சிற்றுண்டிச்சாலை குத்தகையை சனசமூக நிலையம் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் நகரசபை உறுப்பினர் கே.கருணானந்தராஜா தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை நகரசபை பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை சனசமூக நிலையத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டு 9ஆம் மாதம் வரை கனகரத்தினம் என்பவர் குத்தகைக்கு எடுத்து செய்து வந்ததாகவும் அவர் 9ஆம் மாதத்துடன் சுகயீனம் காரணமாக குத்தகையை இடைநடுவே நிறுத்திக் கொண்டதாகவும் கருணானந்தராஜா கூறினார்.
இதன்பின்னதாக கடந்த 11ஆம் மாதம் முதல் றோ.இராஜேஸ்வரி என்பவருக்கு குத்தகைக்கு வழங்க தான் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர் என்ற ரீதியில் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
சிற்றுண்டிச்சாலை நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தமை மற்றும் ஒழுங்காக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை கருணானந்தராஜா மறுத்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வல்வெட்டித்துறை நகரசபையில் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில் அதனை தோற்கடிப்பதற்கான தீர்மானத்தை தான் உள்ளிட்ட சிலர் எடுத்துள்ளதாகவும் அதன் காரணமாகவே நகரசபைத் தலைவர் ந.ஆனந்தராஜ் இவ்வாறான மோசடி குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்துவதாக கருணானந்தராஜா தெரிவித்தார்.
இதேவேளை நகரசபைத் தலைவரால் மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் நகரசபை உறுப்பினர் க.குலநாயகத்தின் கருத்துக்களை அறிய முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில் 2013ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டிற்கான வல்வெட்டித்துறை நகரசபை பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை குத்தகை கடந்த 3ஆம் திகதி ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating