மன்னார் பிராந்திய ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை
மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் திங்கட்கிழமை(9) மூன்று மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு மன்னார் பொலிஸாரினூடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) காலை ஊடகவியலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை (9) காலை 11.30 மணியளவில் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் சட்டத்தரணியூடாக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்றிருந்தார். எனினும், விசாரணைகளின் போது ஊடகவியலாளருடன் சட்டத்தரணியை இருக்க அங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்த விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக என்னிடம் விசாரணை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு ஊடகமொன்றில் வெளியான செய்தி ஒன்றின் பிரதியை காண்பித்து அதனை நானே எழுதியதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் அந்த செய்தி எந்த ஊடகத்தில் இருந்து வந்தது என்று தெரிவிக்கவில்லை. அந்த செய்திக்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்து விட்டேன். அதன் பின்னர் எனது தொலைபேசியில் இருந்த இலக்கங்கள் சில தொடர்பாக விசாரணைகள் செய்தனர்.
பின்னர் எனது மின்னஞ்சல் தொடர்பிலும் அதன் இரகசிய இலக்கங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தனர். புலிகள் தொடர்பாகவும், அவர்களுடன் தொடர்புகள் இருக்கின்றனவா? என பல கோணங்களில் என்னிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்’ என்றார்.
Average Rating