அழகுராஜா கார்த்தியின் “பிரியாணி”யில் இருந்து மீண்டும் தீய்ந்துபோன வாசம்!
“அழகுராஜா வழங்கிய கார்த்தியின் பிரியாணி 20-ம் தேதி வெளியாகுமா?” இந்தக் கேள்வி கோடம்பாக்கத்தில் சுற்றிச்சுற்றி வருகிறது. அதற்கு காரணம், கடந்த இரு நாட்களாக வெளியான பிரியாணி விளம்பரங்கள்தான். இவற்றில் முக்கிய நகரங்களில் தேயேட்டர்களின் பெயர்கள் மிஸ்ஸிங்.
“பிரியாணியை தூக்கி கிடப்பில போடு” என்று அழகுராஜா ரிலீஸூக்கு முன் பந்தா பண்ணிய ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, மற்றும் கார்த்திதான், தலையால் தண்ணீர் குடித்தாவது 20-ம் தேதி ‘பிரியாணி’யை கண்டிப்பாக ரிலீஸ் செய்துவிடுவது என்று முழுமூச்சுடன் நிற்கின்றனர்.
இதுவரை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா சொன்ன சொல்லுக்கு தாசானுதாசன்களாக தலையாட்டிய விநியோகஸ்தர்கள், மறு பேச்சு பேசாமல் தலையாட்டுவார்கள் என்ற நினைப்பில் இவர்களாக உடுத்த தீர்மானம் இது.
ஆனால், ‘தலையாட்டிகள்’ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.
எல்லாமே ஆல்-இன்-ஆல் அழகுராஜா விநியோகஸ்தர்களுக்கு கொடுத்த அல்வா காரணமாகத்தான்! ஞானவேல்ராஜா சொன்ன விலைக்கு அழகுராஜாவை வாங்கி வெளியிட்டவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து விலகவில்லை. அதற்குள் கார்த்தி அன்ட் கோ மற்றொரு பிளேட் பிரியாணியுடன் வந்தால் எப்படியிருக்கும்? “ஆளை வுடுங்க சாமி” என்று தெறித்து ஓடுகிறார்கள்.
அதுதான், கோச்சடையன் பட பாணியில், “அதி விரைவில்… வெகு விரைவில்…” என்று சொல்ல வேண்டிய கட்டாயம்!
அழகுராஜாவின் நஷ்டத்தை கொடுத்தால்தான் ‘பிரியாணி’யை ரிலீஸ் செய்ய விடுவோம் இல்லையென்றால் கஷ்டம் என்று விநியோகஸ்தர்கள் கை விரித்து விட்டதால், விட்டுவிட முடியுமா? டென்ஷனாக தயாரிப்பு தரப்பு போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்களை நேரில் அழைத்து பேரமெல்லாம் பேசினார்கள். ஆனால் பிரியாணியை நம்பி வாங்கும் அளவுக்கு கார்த்தியின் பர்போர்மன்ஸ் ரிக்கார்ட் இல்லை.
இப்போது தமிழ்நாட்டின் எல்லா ஏரியாக்களிலும் பிரியாணியை சொந்தமாக ரிலீஸ் செய்யப் போகிறதாம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். 20-ம் தேதிக்குள் தியேட்டர்களை வளைத்துப் போடும் முயற்சியில் மும்மரமாக உள்ளார்கள். விநியோகஸ்தர்களை கேட்டால், “நஷ்டத்தின் flavour எப்படி இருக்கும் என்பதை இவர்களும் அனுபவித்து பார்க்கட்டுமே” என்கிறார்கள்.
Average Rating