ஆசிரியரைக் கொல்ல நினைத்து 3 மாணவர்களை சுட்ட மாணவன் தற்கொலை
நியூயார்க்: ஆசிரியரைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் அவரைத் தேடிய மாணவன், அவர் சிக்காத ஆத்திரத்தில் எதிர்ப்பட்ட மூன்று மாணவர்களைச் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்கப் பள்ளியில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடத்தில்.
அந்தவகையில், அமெரிக்காவின் கொலொரடோவில் சென்டென்னியல் என்ற இடத்தில் உள்ள டென்வர் புறநகர் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் கோபத்தில் எதிர்ப்பட்ட இரு மாணவர்களைச் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 2000 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில், நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு மாணவர் வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து ஒரு ஆசிரியரை தேடியுள்ளார்.
அங்கு அவர் தேடி வந்த ஆசிரியர் இல்லையென தெரிந்ததும் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறிய அந்த மாணவர் கோபத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து வகுப்பறையின் ஓரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தப் போலீசார் காயம் அடைந்த 3 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒரு மாணவனது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பலியான மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் எதற்காக குறிப்பிட்ட ஆசிரியரை தேடினான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Average Rating