தந்தை இறந்தது கூட தெரியாமல், அழுகிய உடலுடன் ஒருவாரம் இருந்த மகன்
ஸ்ரீவில்லிபுத்தூரில், உடல்நலக் குறைவால் தந்தை இறந்தது கூட தெரியாமல் ஒரு வாரம் அவரின் அழுகிய உடலுடன் மகன் இருந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் 85; கூட்டுறவு துறையில் துணைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவியை இழந்தவரான இவருக்கு முருகேசன் 53, சண்முககுமார் 50, என இரு மகன்கள் உள்ளனர்.
இதில் முருகேசன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; இவருக்கு திருமணமாகவில்லை. தந்தையுடன் வசித்து வந்தார். திருமணமான சண்முககுமார் அருகில் உள்ள தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் சுந்தரம், படுத்த படுக்கையாக இருந்துள்ளார். நேற்று காலை, இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பக்கத்து வீட்டினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் வந்த போது அங்கு, முருகேசன் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார்.
அவரிடம் பொலிஸார் உன் தந்தை எங்கே என்று கேட்ட போது “உடல் நலம் சரியில்லாததால் மருந்து சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருக்கிறார்´ என சுந்தரத்தின் உடலை காண்பித்துள்ளார்.
அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மற்றொரு மகன் சண்முககுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தந்தை இறந்தது கூட தெரியாமல் ஒரு வாரம் அவரது உடலுடன் மகன் இருந்துள்ளார்.
Average Rating