இத்தாலி இளவரசர் கைது
விபசார விடுதிக்கு சப்ளை செய்வதற்காக பெண்களை வேலைக்கு சேர்த்த குற்றத்துக்காக இத்தாலி நாட்டு இளவரசர் விக்டர் இம்மானுவல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தாலி நாட்டு மன்னராக இருந்தவர் 2-ம் உம்பெர்ட்டோ. 1946ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் இத்தாலியர்கள் மன்னர்ஆட்சிக்கு எதிராக ஓட்டுப்போட்டதை தொடர்ந்து மன்னர் உம்பெர்ட்டோ தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். உம்பெர்ட்டோ வின் மகனான இளவரசர் விக்டர் இம்மானுவலுக்கு அப்போது வயது 9.
சர்வாதிகாரி முசோலினியுடன் சேர்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சி நடத்துவதற்கு மன்னர் உதவியாக இருந்ததாலும், 1944-ம்ஆண்டு ஜெர்மனி ராணுவம் படைஎடுத்து வந்தபோது மன்னர் குடும்பம் ரோம் நகரை விட்டு ஓடியதாலும் இத்தாலியர்கள் வாக்கெடுப்பில் மன்னருக்கு தண்டனை கொடுத்தனர். இதன் மூலம் சவோய் வம்ச ஆட்சி அழிந்து போனது. மன்னர் உம்பெர்ட்டோ 1983-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் மரணம் அடைந்தார்.
அதன் பிறகு ஐரோப்பா முழுவதும் சுற்றித்திரிந்த இம்மானுவல் 2002-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். மன்னரின் ஆண் வாரிசுகள் இத்தாலிக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதும் இம்மானுவல் இத்தாலி திரும்பினார்.
நாடு திரும்பியதும் அவர் செய்த முதல் வேலை, போப் ஆண்டவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆசி பெற்றதுதான்.
இத்தாலி நாட்டில் விபசாரமும், ஊழலும் பெருகி வருவது பற்றி விசாரணை நடத்திய போலீசார் 69 வயதான இம்மானுவல் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இத்தாலி பகுதியான கேம்பியோன் டி இத்தாலியாவில் உள்ள சூதாட்ட கிளப்புகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக பெண்களை வேலைக்கு சேர்த்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மந்திரி சபையில் வெளிநாட்டு மந்திரியாக இருந்தவரின் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.
இளவரசர் இம்மானுவலுக்கு மாபியாக்கள் உடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் நம்புகிறார்கள். இளவரசர் இம்மானுவல் பொடென்சா என்ற இடத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் கைதானது இத்தாலி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகுந்த ஆதாரம் இருந்ததன் பேரிலேயே இளவரசரை கைது செய்ய வாரண்டு பிறப்பித்ததாக மாஜிஸ்திரேட்டு இயானுசி ஆல்பர்ட்டோ தெரிவித்தார்.
1989-ம் ஆண்டு படகில் பயணம் செய்த 19 வயது ஜெர்மானிய இளைஞரை சுட்டுக்கொன்றதாக ஏற்கனவே கைதான இம்மானுவல் மீது பாரிஸ் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல விசாரணைகளுக்கு பிறகு அவர் விடுதலை ஆனார்.