இராவணன் தமிழனா? சிங்களவனா? மேர்வின் -யோகேஸ்வரன் எம்.பி.க்கிடையில் விவாதம்
இராவணேஸ்வரன் தமிழனா – சிங்களவனா? இலங்கை இந்து நாடா? பௌத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சபையில் கடும்வாதம் ஏற்பட்டது.
இலங்கை இந்து நாடு என்றும் சிவபக்தனான இராவணேஸ்வர மன்னன் இலங்கையை அரசாட்சி புரிந்ததாகவும் கூறி வரலாறுகளை எடுத்துக்காட்டிப் பேசினார்.
இதன்போது யோகேஸ்வரன் எம்.பி.யின் எடுத்துக்காட்டல்களை உடனடியாக மறுத்துரைத்த அமைச்சர் மேர்வின் சில்வா, யோகேஸ்வரன் எம்.பி.யின் கருத்துக்கு மாறான வாதத்தை முன்வைத்து இதிகாசங்களையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது இராவணேஸ்வரன் மன்னன் சிங்களவன் என்றும் இலங்கை பௌத்த நாடு என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போதே இந்த வாதங்கள் இடம்பெற்றன.
முன்னதாகப் பேசிய யோகேஸ்வரன் எம்.பி. இலங்கை என்பது இந்து நாடு என்பதற்கு சான்றுகள் இருப்பதாகக் கூறி வரலாற்று தடயங்களையும் முன்வைத்தார்.
அத்துடன் இராவணேசன் என்ற மன்னன் இலங்கையை ஆட்சிபுரிந்த தமிழன் என்றும் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் இந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனது மகன்மாருக்கு இந்து மதப் பெயர்களை சூட்டிய வரலாறும் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் பேசிய அமைச்சர் மேர்வின் சில்வா கூறுகையில்,
இலங்கை என்பது பௌத்த நாடாகும். அதில் மாற்றங்களுக்கு இடமில்லை. மேலும் இராவணேஸ்வரன் சிங்கள மன்னனாவான். புத்தகங்கள் எதனையும் கூறமுடியாது.
அது வரலாறு ஆகிவிடாது. அதே போன்று இந்துப் பெண்களை திருமணம் முடித்தால் இந்த நாடு இந்து நாடாக மாறிவிடாது. வரலாறுகளை திசை திருப்புவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றார்.
Average Rating