சிரியா சிறையில் இந்திய வம்சாவளி டாக்டர் கொலை: பிரிட்டன் குற்றச்சாட்டு
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். 3 வருடமாக நடக்கும் சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவ பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி எலும்பு முறிவு மருத்துவர் அப்பாஸ் கான் (32), அலெப்போ நகருக்கு சென்றார். அங்குள்ள ஒரு மருத்துமனையில் தங்கி பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரை சிரியா ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரைக் காண அவரது தாயார் பாத்திமாவும் சிரியா சென்று தேடி வந்தார். இந்நிலையில் அவர் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்று சிரியா நிர்வாகம் கூறியது.
இதை மறுத்துள்ள பிரிட்டன் வெளியுறவு துணை அமைச்சர் ஹக் ராபர்ட்சென் கூறியதாவது:-
பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் சிறையில் இறந்ததற்கு அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசே பொறுப்பு. உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவிசெய்ய வந்த ஒருவரை சிறையில் அடைத்து அதன் நிர்வாக நடவடிக்கையால் இறந்துள்ளார் என்பது கொலைக் குற்றத்திற்கு ஈடானதாகும்.
எனவே இந்த நடவடிக்கைக்கு மன்னிப்பே கிடையாது. எனவே மருத்துவர் அப்பாஸ் கானுக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து உடனடியாக சிரியா விளக்கமளிக்கவேண்டும். ஆனால், அவருடைய இறப்பு மிகவும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வாரத்தில் விடுதலை செய்ய சிரியா நிர்வாகம் உறுதியளித்திருந்த நிலையில், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சியில் நிலைகுலைய வைத்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவரைப் போலவே போரில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிப்பதற்காக கடந்த ஆண்டு சிரியாவிற்கு சென்ற இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவழியினரான டாக்டர் இசா அப்துர் ரஹ்மான் என்பவரும் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
Average Rating