பேரறிவாளன் மரண தண்டனையை மீள்பரிசீலிக்குமாறு, இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை அடங்கிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என். ராஜாராமன் மற்றும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடியரசுத் தலைவரின் பிரத்தியேக செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
ஏற்கனவே பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சின் பரிந்துரைக்கு அமைய இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்திருந்தார்.
எவ்வாறாயினும் தண்டனையை எதிர்நோக்கியுள்ளவருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபனமானால் உள்துறை அமைச்சின் ஆலோசனை இன்றியும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பரிசீலனை செய்ய முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி ஆர்.கிருஷ்ணமூர்த்தி த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது கருத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை என முன்னாள் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டுள்ளமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு மரண தண்டனையும், நளினிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating