சங்கிலிகளால் பிணைத்து உண்ணாவிரதம்: வீரவன்சவின் உறுப்பினரும் இணைவு
ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளார்.
அவர் தனது கைகளை சங்கிலிகளால் பிணைத்து லொறியொன்றுடன் இணைத்துகொண்டே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நேற்றிரவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தே அவர் தன்னுடைய கைகளை சங்கிலியால் பிணைத்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுரலிய பஸ் தரிப்பிடத்தில் இடம்பெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் வலல்லாவிட்ட பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் திலீப் பிட்டிகலவும் இணைந்து கொண்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பாலிந்தநுவர பிரதேச சபையின் உறுப்பினர் பிரியந்த பெல்லனவும் இணைந்துகொண்டார்.
உண்ணாவிரத போராட்டத்தையடுத்து அந்த வைத்தியசாலை திறக்கப்பட்டது. எனினும் வைத்தியர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை என்றும் சிகிச்சைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating