இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை
எதிரி நாடுகளான பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே நடந்து வந்த சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என பாலஸ்தீனிய அதிபர் முஹம்மது அப்பாஸ் கூறியிருந்தார்.
இதனை ஏற்று, சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடருவதற்கான துவக்கமாக 104 கைதிகளை விடுதலை செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாகு அறிவித்தார்.
தனது ‘பேஸ் புக்’ பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ‘நாட்டின் நலன் கருதி, பொது கருத்துக்கு எதிராக நான் இதைப்போன்ற முடிவுகளை பிரதமர்கள் எடுக்க வேண்டியுள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் மந்திரி சபையும் ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பையடுத்து முதல்கட்டமாக 26 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஊடகங்களின் பார்வையில் இருந்து தப்பும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையானவர்களில் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டு கிடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு கரை வழியாக பாலஸ்தீன எல்லைக்குள் நுழைந்த விடுதலை செய்யப்பட்ட கைதிகளை பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் கட்டித் தழுவி வரவேற்றார்.
இரண்டாம் கட்டமாக மேலும் 26 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீன கைதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் கொட்டும் பனியை கூட பொருட்படுத்தாமல் விடிய, விடிய சிறை வாசலில் காத்திருந்தனர்.
கைதிகள் விடுவிக்கப்படுவதாக சிறை அதிகாரிகள் அறிவித்ததை விட 2 மணி நேரம் கடந்தும் அவர்கள் விடுவிக்கப்படாததால் வாசலில் காத்திருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர், விடுதலை அடைந்தவர்கள் ஒவ்வொருவராக சிறையில் இருந்து வெளியே வரத் தொடங்கியதும் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வெளியே வந்தவர்களை அவர்களது உறவினர்களும், நண்பர்களும் ஆனந்த கண்ணீர் மல்க கட்டித்தழுவி அழைத்து சென்றனர்.
Average Rating