மட்டக்களப்பு: 15 அடி நீள முதலையினைப் பிடித்து மீண்டும் வாவியில் விட்ட அதிகாரிகள்
மட்டக்களப்பு நகர் வாவியில் தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்திவரும் இரண்டு முதலைகளில் ஒன்றான 15 அடி ஆண் முதலையினை நேற்று பிடித்த மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்ல முடியாத நிலையில் மீனவர்களின் கோரிக்கையையும் மீறி மீண்டும் வாவியில் விட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர் புதுப் பால வாவியில் இரண்டு பாரிய முதலைகள் தொடர்ந்து மீனவர்களையும் அப் பகுதி மக்களையும் அச்சுறுத்தி வரும் நிலையில் நேற்று காலை 15 அடி நிளமுடைய ஆண் முதலை மீனவர் ஒருவரது வலையில் சிக்கி வலையைப் கிளித்ததுடன் அப் பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில் மீனவர்கள் அச்சத்தில் வாவியை விட்டு வெளியேனர்.
இந் நிலையில் மட்டக்களப்பு சிவில் பாதுகாப்புக் குழு தலைவர் ராஜன் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதை அடுத்து குறித்த இடத்துக்கு சென்ற அதிகாரிகள் முதலையை பாரிய சிரமத்தின் பின்னர் பிடித்த போதும் குறித்த முதலையை கொண்டு செல்வதற்கான வசதிகள் இல்லாத நிலையில் மீண்டும் வாவியில் விட்டுள்ளனர்.
குறித்த முதலையினை கரையேற்றிக் கொண்டு செல்வதற்கான வளங்கள் தங்களிடம் இல்லாத நிலையில் முதலையினை கொல்லுவதற்கான அதிகாரமும் தங்களுக்கு இல்லாத காரணத்தினால் மீண்டும் வாவியில் விட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த அதிகாரிகளிடம் மீனவர்கள் வாவியில் மீண்டும் முதலையை விட வேண்டாம் எனவும் இந்த முதலைகளால் தங்களால் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாமல் உள்ளதாகவும் கெஞ்சிக் கேட்ட போது தங்களால் ஏற்றிச் செல்வதற்கான வளம் இல்லாத அதேவேளை முதலையை கொல்லுவதற்கான அதிகாரமும் இல்லாததினால் மீண்டும் விடுவதை விட வேறு வழியில்லை எனத் தெரிவித்து மீனவர்களின் கோரிக்கையை மறுத்து வாவியில் விட்டுள்ளனர்.
Average Rating