பனிச்சறுக்கின் போது ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு எலும்பு முறிவு!
ஜெர்மனியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கல்(59), கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். ஜெர்மனி-சுவிட்சர்லாந்தின் என்காடின் பிராந்தியத்துக்கு இடைப்பட்ட உயரமான பகுதியில் சறுக்கியபோது, திடீரென தவறி விழுந்தார்.
இதனால் அவரது இடுப்பில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இடுப்பில் சிராய்ப்பு ஏற்பட்டதால் வலி ஏற்பட்டதாக முதலில் நினைத்தனர். ஆனால், பெர்லின் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்தபோது, இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மூன்று வாரங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மூன்று வாரங்களுக்கு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக இன்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் முக்கிய பணிகளை பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தனது வீட்டில் இருந்தபடியே கவனிப்பார். புதன்கிழமை வர்சா நகருக்கு செல்வதையும், லக்சம்பர்க்கின் புதிய பிரதமருடனான சந்திப்பையும் ரத்து செய்துள்ளார். இருப்பினும் புதன்கிழமை நடைபெறும் முதல் மந்திரிசபை கூட்டத்திற்கு ஏஞ்சலா தலைமை தாங்குவார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating