தந்தையை கொலை செய்ய, ரூ.1 கோடி குத்தகை வழங்கிய மகன் கைது
காணி பிரச்சினை தொடர்பில் கோடீஸ்வரரான தனது தந்தையை கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கு குத்தகை வழங்கிய மகன் உட்பட மூவரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு , கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் ‘கோல்டன் எவன்வத்தை’ காணியின் உரிமையாளரான தனவந்தரான எதிரிசிங்க ஆராச்சிகே நவரத்ன (72 வயது) என்பவரின் மரணம் தொடர்பிலேயே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் இளைய மகனான எதிரிசிங்க ஆராச்சிகே ஜிஹான் லங்கா நவரத்ன, கொலை செய்வதற்கான குத்தகையை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிந்தொட்ட மானவடுகே அனுரபிரியங்கர, மிஹிந்து குலசூரிய ஜோசப் கெலிஸ்டர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கொலை செய்யப்பட்டவர் பல ஏக்கர் காணிகளின் உரிமையாளரும் கோடீஸ்வரருமாவார். அவருக்கு இரணடு பிள்ளைகள் உள்ளனர்.
தனது மகன்மாருக்கு அவர் தனது காணிகளின் பெரும்பகுதியை வழங்கியுள்ளார். இளைய மகன் தனக்கு வழங்கப்பட்ட காணிகளை விற்று பணத்தை வீண் விரயம் செய்துள்ளார்
பின்னர் எஞ்சியுள்ள காணியை தந்தையிடம் கேட்டு தொல்லை கொடுத்தபோதும் தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
எஞ்சியுள்ள காணியை விற்று வயோதிபர் இல்லமொன்றுக்கு வழங்க வேண்டும் என்பதே அவரது தந்தையின் திட்டமாக இருந்துள்ளது.
இந்நிலையில், இளைய மகன் தனது தந்தையை கொலை செய்ய கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவருக்கும் 100 இலட்சம் ரூபாவுக்கு கொடுத்துள்ளார்.
இதன்படி கடந்த டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி தந்தை வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சநதேக நபர்கள் மூவரையும் கைது செய்து நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்த போதே நீர்கொழும்பு மேலதிக நீதவான் டி.எம்.டி. பண்டார சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating