தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை, பொல்லால் தாக்கிக் கொன்ற தம்பி
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது சகோதரனை பொல்லினால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஜா-எல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த யக்கடுவே, தெனியகட பிரதேசத்தைச் சேர்ந்த சரத்குமார, (45 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
ஜா-எல, யக்கடுவ தெனியகடே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய திலக்குமார என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். சம்பவத்தில் மரணமடைந்த நபரும், சந்தேக நபரும், அவர்களது 80 வயதுடைய தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வருபவர்களாவர். சந்தேக நபர் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்பவராவார்.
சம்பவ தினத்தன்று சந்தேக நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது அண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் நித்திரையில் இருந்த அண்ணனின் தலையை பொல்லொன்றினால் தாக்கியுள்ளார். இதன்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அண்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Average Rating