ராமர் பஜனை ஊர்வலத்தில் அருள் வந்து ஆடி, விரலை கடித்துத் துப்பிய இளைஞன்
பொகவந்தலாவ – ராணிகாடு (ஓல்டி) தோட்டத்தில் தைப்பொங்கல் தினமான நேற்று இறுதி ராமர் பஜனை ஊர்வலத்தில் குழப்பம் ஏற்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரை கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிறிபால தெரிவித்ததாக செய்தியாளர் கூறுகிறார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இறுதி பஜனை நாள் தினமான நேற்று ராணிகாடு தோட்டத்தில் பஜனை ஊர்வலம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, குறித்த தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் அருள் வந்ததுபோல் நடித்து ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது அவரை பிடிக்கச் சென்ற பஜனை மாஸ்டரின் பெருவிரலை கடித்து துண்டாக்கியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து கத்தியுடன் ஓடிவந்த குறித்த இளைஞனின் தாய் ஒருவரை கையில் வெட்டியுள்ளார். அவருக்கு ஐந்து தையல் போடப்பட்டுள்ளது.
மேலும் ஒருவரது கண் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த மூவரும் தற்சமயம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழப்பம் விளைவித்த இளைஞன் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரது தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating