வீட்டு உரிமையாளரை கொன்று, இருதயத்தை உண்ண முயற்சித்த நபர்
செஸ் விளையாட்டு ஒன்று தொடர்பான வாக்குவாதமொன்றையடுத்து தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளரை கொன்று அவரது மார்பை பிளந்து அவரது இருதயத்தை நபரொருவர் உட்கொள்ள முயற்சித்த விபரீத சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
அயர்லாந்திலுள்ள பழைமைவாத கத்தோலிக்க புத்திஜீவிகள் அமைப்பில் கொள்கை ஆய்வாளராக பணியாற்றிய டொம் ஒ கொர்மன் என்பவரை, அவரது வீட்டில் அவருடன் வசித்து வந்த இத்தாலியரான சவெரியோ பெல்லன்ட (34வயது) கொன்று இவ்வாறு இருதயத்தை உண்ண முயற்சித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மேற்படி படுகொலை தொடர்பான வழக்கு டுப்ளின் நகரிலுள்ள பிளன்சர்ட்ஸ்டவுன் எனும் இடத்திலுள்ள நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தனது தாயாருடன் டுப்ளினின் புறநகரப் பகுதியிலுள்ள மேற்படி வீட்டில் வசித்து வந்த டொம் (39 வயது), 2012 ஆம் ஆண்டில் தாயார் இறந்ததும் அந்த வீட்டிலிருந்த அறையொன்றை பெல்லன்ட்டிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டொம்மும் பெல்லன்ட்டும் செஸ் விளையாட்டில் ஈடுபட்ட போது அவர்களிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சினமடைந்த பெல்லன்ட், டொம்மை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த பின் அவரது இருதயத்தை உண்ண முயற்சித்ததாக கூறப்படுகிறது.
Average Rating