பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினரை, இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட முகுந்தன் எனப்படும் தர்மலிங்கம் ஜயந்தன் எனப்படும் நபர் விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் என குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன,2008 மே மாதம் கோட்டை சம்போதி விகாரையின் அருகில் பொலிஸ் பஸ் வண்டி மீது மோட்டார் சைக்கிளில் வந்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் என குறிப்பிட்டுள்ளார்.
பொட்டு அம்மானின் கீழ் செயற்பட்டுள்ள குறித்த முகுந்தன் எனப்படும் தர்மலிங்கம் ஜயந்தன் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி கறுவாத்தோட்டம், ஹோட்டன் சுற்றுவட்டம் அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட பஸ் வண்டி குண்டுத்தாக்குதல்களுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததாகவும் அந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தயார்படுத்தியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நபர், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் பொலிஸ் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating