300 மில்லியன் செலவில், தெல்லிப்பளையில் புற்றுநோயாளர் வைத்தியசாலை
ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கலர் ஒப் கரேஜ் நம்பிக்கை நிறுவகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த வைத்தியசாலை கட்டிடத்தொகுதி 300 மில்லியன் ரூபா நிதிச்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை இலங்கையிலுள்ள மக்கள், புலம்பெயர் வாழ் மக்கள், பல நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
அத்துடன், 2011 ஆம் ஆண்டு கலர் ஒப் கரேஜ் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் மஹரகமவிலிருந்து பருத்தித்துறை வரை நடைபெற்ற நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியிலும் இக்கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையை அமைப்பதற்கு 4 ஏக்கர் காணியினை ஈ.எஸ்.பி.நாகரத்தினம், சட்டத்தரணி மாணிக்கஜோதி அபிமஞ்யூசிங்க ஆகிய இருவரும் இணைந்து இலவசமாக வழங்கியுள்ளனர்.
திறந்து வைக்கப்படவுள்ள புதிய கட்டடத்தில் ஆண், பெண் மற்றும் சிறுவர்களுக்கு 30 விடுதிகள் வீதம் 90 விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு விடுதியில் 30 கட்டில்கள் வீதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இக்கட்டிட திறப்பு விழாவுடன் சேர்த்து கலர் ஒப் கரேஜ் எனப்படும் புதிய சிகிச்சைப்பிரிவிற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டி வைக்கவுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், தெல்லிப்பளை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.உமாசங்கர், கலர் ஒப் கரேஜ் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Average Rating