நீண்ட காலத்திற்கு பின், கைகுலுக்கிக் கொண்ட ஹிந்தி நடிகை ரேகா, ஜெயாபச்சன்
ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.
அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய விழாவில் தான் இவ்விருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
‘லைப் ஓ.கே’ திரை விருது விழங்கும் நிகழ்ச்சியில் ரேகா பங்கேற்று அதை ரசித்து பார்த்து கொண்டிருந்த போது, அமிதாப், ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கு வந்தனர்.
அபிஷேக் ஊடகத்துறையினருடனும், அமிதாப் விருந்தினர் ஒருவரிடமும் பேசிக் கொண்டிருந்த போது ஜெயாபச்சன் எதேச்சையாக ரேகாவின் இருக்கைக்கு அருகே வந்தார். ரேகாவை பார்த்தவுடன் விலகிச் செல்லாமல் அவரை பார்த்து புன்னகைக்க அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.
பின்னர் தனது இருக்கையிலிருந்து எழுந்த ரேகா ஜெயாவுடன் கைகுலுக்கியதுடன் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அமிதாப்பும் ரேகாவும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1981 ஆம் ஆண்டு வெளியான ‘சில்சிலா’ படமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். இப்படத்தில் ஜெயாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating