புலியை செல்போனில் பிடிக்க ஊட்டியில் பலே வியூகம்! (போட்டோ பிடிக்க அல்ல!)
ஊட்டியில் புலி நடமாடுவதால் கிலி கொண்ட மக்களை காப்பதற்கு தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு, தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது, வனத்துறை மற்றும் காவல்துறை கூட்டணி.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா, தொட்டபெட்டா மற்றும் குந்தசப்பை பகுதியில் மூன்று பேரை புலி ஒன்று கொன்றது. குந்தசப்பை பகுதியில் தற்போது புலி ஒன்று நடமாடுவது தெரிய வந்துள்ளதால், மூன்றுபேரை கொன்ற அந்த புலிதான், இந்தப் புலி என்று வனத்துறை அடித்துச் சொல்கிறது.
புலியை விசாரித்தால்தான் இது உண்மைதானா என்பது தெரியும்.
அதையடுத்து தொடங்கியுள்ள புலி வேட்டைக்காக 6 இடங்களில் கூண்டுகள், பரண்கள் அமைக்கப்பட்டும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டும் உள்ளன. கடந்த 17-ம் தேதி மாலை 5 மணியளவில் குந்தசப்பை கிராமம் அருகே தேயிலை தோட்டத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் புலி நடமாடியது கேமராவில் பதிவானது.
கேமரா, புலியை படம் பிடித்ததே தவிர, இவர்களால் புலியை பிடிக்க முடியவில்லை. 10 நிமிடம் வெயிட் பண்ணிவிட்டு, புலி போய்விட்டது.
நேற்று முன்தினம் மேக மூட்டம் நிலவியதால், தெர்மல் சென்சார் கேமரா மற்றும் தொலைநோக்கிகளை கொண்டு தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து ‘பதுங்கியிருந்து தாக்கும்’ முறையை கையாளப் போவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதுங்குவது புலியா, வனத்துறையினரா என்பது போகப்போகத்தான் தெரியும்.
‘பதுங்கியிருந்து தாக்கும்’ முறையை வனத்துறையினர் கவனித்துக்கொள்ள, ‘ஏர்லி வார்னிங் டிடெக்டிவ் சென்சார்’ கருவியை குந்தசப்பை பகுதி தேயிலைத் தோட்டத்தில் பொருத்தி, புலி தேடுதல் வேட்டை மறுபுறமாக நடக்கிறது.
இந்த ‘ஏர்லி வார்னிங் டிடெக்டிவ் சென்சார்’ கருவியுடன் 5 செல்போன் எண்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். இந்த சென்சார் கருவி சுமார் 100 முதல் 250 அடி தூரம் வரை புலி வந்தால் அதன் நடமாட்டத்தை பதிவு செய்யும். அதே வேளையில் உடனுக்குடன் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கு டெக்ஸ்ட் தகவல் அனுப்பி வைக்கும்.
இந்த செல்போன் டெக்ஸ்ட் மெசேஜை வைத்து புலியை பிடித்து விடலாம் என்கின்றனர், வனத்துறையினர்.
புலி வேட்டை தொடங்கி 10 நாட்களுக்கு மேலாகியும், புலி இவர்களுக்கு தண்ணி காட்டிக்கொண்டு திரிகிறது. இப்படியே இன்னும் கொஞ்ச நாள் போனால், புலியே மனமிரங்கி இவர்களது செல்போனுக்கு SMS அனுப்பினாலும், அனுப்பலாம்!
புலி நடமாட்டம் உள்ளதால், அந்த பகுதியில் உள்ள 45 பாடசாலைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. புலி டிமிக்கி கொடுத்து விட்டால், இன்று திங்கட்கிழமையும் விடுமுறை தொடரும்.
Average Rating