யாழ் மாவட்ட தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது இன்று (19.06.2006) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள், உயிர் நீத்த தோழர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய தோழர் மோகன். எமது அன்புக்குரிய தலைவர் தோழர் பத்மநாபா 1970 ஆம் ஆண்டு ஒரு மாணவனாக அரசியல் நடவடிக்கைகளில் இணைந்துகொண்டவர் எனவும் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்படும் வரை தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக அயராது, உறுதியாக போராடியவர் எனவும் தெரிவித்தார்.
தமது கல்வியையும், தொழில் வாய்ப்புக்களையும் இழந்ததுடன் தமது சொந்த நலன்களை புறந்தள்ளி தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கான போராட்டத்தில் இணைந்துகொண்ட உங்கள் பிள்ளைகள் தமது உயிரையும் அர்ப்பணித்தார்கள். தமிழ் பேசும் மக்களின் சுபிட்சமான எதிர்காலத்தை கனவுகண்ட உங்கள் பிள்ளைகள் பலர் எவ்வித குற்றமும் இழைக்காமல் தமிழ் சமூகத்தில் தோன்றிய பாசிசத்திற்குப் பலியானார்கள்.
தோழர் பத்மநாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான இந்த நாளை நாங்கள் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் அனுஷ்;டித்து வருகின்றோம். இந்த நாளில் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகம், மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் போராடி தமது உயிரை அர்;ப்பணித்த எமது தோழர்கள், இதர இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூருகின்றோம். இந்த வகையில் இன்று 16வது தியாகிகள் தினத்தை அனுஷ்டிக்கிறோம். உங்கள் பிள்ளைகள், எங்கள் தோழர்கள் என்ன நோக்கத்திற்காக தம்முயிரை அர்ப்பணித்தார்களோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து செயற்படுவோம் இதற்கு உங்கள் ஆதரவும், பங்களிப்பும் என்றும் எமக்கு கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.