அம்மாவின் கிரீன் சிக்னல் கிடைக்குமா? மாஜி அமைச்சர் தவமாய் தவமிருக்கிறார்!
இது தேர்தல் காலம் என்பதால், அரசியல்வாதிகளின் கட்சித் தாவலுக்கும் உகந்த காலம் என்று சொல்லலாம். சாதாரண நேரத்தில் தாவுவதைவிட, இப்போது தாவினால், தோளில் ஒரு துண்டாவது அதிகம் விழும்!
அ.தி.மு.க. வட்டாரங்களில் அடிபடும் பேச்சுக்களில், ‘தாவ தயாராக இருப்பவர்கள்’ லிஸ்ட் பெரிதாக இருக்கும் போலிருக்கிறதே! முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமிகூட மீண்டும் அ.தி.மு.க.வுக்கு தாவ, கொடநாட்டிலிருந்து (அல்லது போயஸ்கார்டன்?) சிக்னலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 1989-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதியில் ஜெ. அணி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் பொன்னுச்சாமி.
1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற பொன்னுச்சாமி, துணை சபாநாயகராகவும், பின்னர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் வந்த (1996) திமுக ஆட்சியில் பொன்னுச்சாமி மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
என்ன காரணத்தாலோ தெரியவில்லை, மேல்முறையீடு செய்யாமல் வேலூர் சிறையில் உப்புத் தின்றுகொண்டிருந்த பொன்னுச்சாமி பின்னர் ஒருவழியாக விடுதலையானார்.
சிறையில் இருந்த காலத்தில் கட்சி தன்னை கண்டுகொள்ளாததால் விரக்தியடைந்த பொன்னுச்சாமி முதலில், தே.மு.தி.க.வில் இணைந்து கொண்டார். அங்கே, அடிக்கு பயந்தோ, என்னவோ, அங்கிருந்து தி.மு.க.வுக்கு தாவினார். 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார்.
இவரது போதாத காலம், அத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, கட்சிப்பணியில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் தனது தாய் கழகத்துக்குச் செல்ல முடிவு செய்து அ.தி.மு.க. தலைமைக்கு தூது மேல் தூது விட்டுக்கொண்டு இருக்கிறார் என்று தெரிகிறது.
அம்மாவின் கடைக்கண் பார்வை இதுவரை திறக்கவில்லை. ஆனால், இது தேர்தல் நேரம் என்பதால் கிரீன் சிக்னல் கிடைக்கும் எனத் தெரிகிறது.
Average Rating