தேர்தல் கூட்டணி குறித்து மலேசியாவில் ஆலோசித்த விஜயகாந்த் எடுத்த முடிவு என்ன?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் இழுக்க தி.மு.க, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மலேசியாவில் இருந்து திரும்பிய விஜயகாந்த், தொடர்ந்தும் யாருக்கும் பிடி கொடுக்காத நிலையில்தான் இருந்து வருகிறார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்தால், ஆளாளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்பதால், யாருடன் கூட்டணி வைப்பது என்று தமது நண்பர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த 18-ம் தேதி மலேசியா சென்றார் விஜயகாந்த்.
அங்கு தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அங்கேயும் அன்புத் தொல்லை விடவில்லை. தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாக தமீம் அன்சாரி விஜயகாந்தை மலேசியாவில் சந்தித்து, தி.மு.க. கூட்டணியில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
ஒருவழியாக நண்பர்களுடன் ஆலோசனைகள் நடத்தி முடித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை திரும்பினார் விஜயகாந்த்.
“ஆலோசனை முடிந்ததே.. முடிவு என்ன?” என்று இப்போது ஆளாளுக்கு தொடர்பு கொண்டு கேட்க தொடங்கி விட்டார்களாம். அப்படியிருந்தும், கேப்டன் வாயில் இருந்து பதில் வருவதாக இல்லை. “யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப். 2-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் அறிவிப்போம். அப்போது தெரிந்து கொள்ளுங்கள்” என்ற பதில்தான் இன்றுவரை அனைவருக்கும் கூறப்படுகிறது!
விடுங்கப்பா.. அவரே பிப். 2-ம் தேதி சொல்லிடுவாரு. அதற்கு முன்னாடி அவரை கோபப்படுத்தாதீங்க… கோபம் வந்திச்சுன்னா என்னாகும்னு தெரியும்தானே ஜென்டில்மேன்!
Average Rating