இரண்டாவது சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்றது!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 2வது சுற்றுக்கு உலகக் கோப்பை சாம்பியன் அணியான பிரேசில் தகுதி பெற்றுவிட்டது! எஃப் பிரிவில் நேற்று நடந்த போட்டியில், ஆஸ்ட்ரேலிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றது. ஆட்டத்தின் முதல் பகுதியில் பிரேசில் அணி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் ஆஸ்ட்ரேலிய அணியினர் நன்கு தடுத்துக் காத்தனர். ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ரொனால்டினோ கொடுத்த பந்தை எடுத்துக் கொண்டு டிக்குள் நுழைய முயன்றார் ரொனால்டோ. ஆனால் அவரை 3 வீரர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து பந்தை மற்றொரு வீரருக்கு தட்டிவிட்டார். அவர் அதனை கோலுக்குள் அடித்தார்.
அதன்பிறகு ஆஸ்ட்ரேலிய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. கோலை நோக்கி அவர்கள் மேற்கொண்ட முன்னேற்றத்தையும், நடத்தியத் தாக்குதலையும் தடுத்து நிறுத்த பிரேசில் அணி திணறியது. அடுத்த 20 நிமிடங்கள் ஆஸ்ட்ரேலிய அணியின் ஆட்டத்தினால் பிரேசில் அணி திக்குமுக்காடியது.
இறுதி கட்டத்தில் ஆட்டம் முடியும் தறுவாயில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய டிரட், கோல் கம்பத்தில் பட்டு வந்த அந்த பந்தை சுலபமாக கோலுக்குள் தள்ளினார். 2-0 என்ற கோல் கணக்கில் வென்றாலும், பிரேசில் அணியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
நேற்றுமுன்தினம் நடந்த முதல் போட்டியில் ஜப்பானும், குரோஷிய அணியும் கோல் ஏதும் போடாமல் வெற்றி தோல்வி இன்றி முடித்துக் கொண்டன.
லீப்சிக்கில் நேற்றுமுன்தினம் நடந்த மற்றொரு போட்டியில், ஜி பிரிவில் தென்கொரியாவும், பிரான்சும் மோதின. இந்த ஆட்டம் 1-1 கோல் கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.