5 கிரிக்கெட் வீரர்கள் சுட்டுக்கொலை : அதிபர் ஹமீத் கர்சாய் கண்டனம்
காபுல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை, ஐநா சபையின் போலியோ முகாம்களில் பங்கேற்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்துள்ளனர்.
அவைகளை மீறுவோரை சுட்டுக் கொல்லவும் தயங்குவதில்லை. மேற்கத்திய விளையாட்டு என்று கூறி கிரிக்கெட் விளையாடவும் தலிபான் இயக்கத்தினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு லாஹ்மென் மாகாணம் அலிங்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகர மைதானத்தில் ஏராளமான உள்ளுர் கிரிக்கெட் வீரர்கள் குழுவாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மைதானத்துக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர், திடீரென விளையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினான்.
இதனால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
இதில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாயினர். ஒரு சில நொடிகளிலேயே விளையாட்டு மைதானம் போர்களம்போல் மாறியது.
அதன்பின்னர் அந்த ஆசாமி பைக்கில் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
எனினும், முதல்கட்ட விசாரணையில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று லாஹ்மென் மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் ஷர்காதி சவுக் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் ஹமித் கர்சாய், ”வன்முறைகளை நிறுத்துவது தொடர்பாக தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனை சீர்குலைப்பதுபோல் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார்.
இதேபோல் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ளுர் வானொலியில் பணிபுரியும் நிருபர் அகமது நூரி(30) என்பவரை கடத்திச் சென்று சுட்டு கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஆப்கனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating