பெண் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பாக பெயின்டர் கைது
பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தொம்பேயைச் சேர்ந்த பெயின்டர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் அல்லது பக்கத்து வீடுகளில் சில நாட்கள் வேலைக்கு சென்றிருக்கலாம் என்றும் நேற்று, வீட்டார் தேவாலயத்திற்கு சென்றதை நன்றாக தெரிந்து வைத்திருந்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்றுக் காலையிலேயே வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டின் முன் வாயிலை திறந்துகொண்டு உள்நுழைகையில் ஊடகவியலாளர் அவரை இனங்கண்டு கொண்டதையடுத்தே தன்னிடமிருந்த கத்தியால் ஊடகவியலாளரை குத்தியதுடன் வீட்டிலிருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூபா 1200 உம், கையடக்க தொலைப்பேசியும் களவெடுத்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கு கூடுதலான தொகையை அவர் திருடியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த நபர் ஹங்வெல்லவிற்கு தப்பிச்சென்றதாகவும் கைது செய்யப்படும்போது நன்றாக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வீட்டுக்குள் நுழையும் விதம் மற்றும் வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்த வீட்டில் மற்றும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களில் பதியப்பட்டுள்ள காட்சிகளை வைத்தே சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating