யாழ் குடாவில் ‘ஆவா’ குழுவினையடுத்து ‘டில்லு’ குழுவும் பொலிஸாரால் கைது!
யாழ்.குடாநாட்டுப் பகுதியில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சமூக விரோதக் குழுவான டில்லுக் குழுவினரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படிக் குழுவினரில் கொக்குவில், தலையாழி, கேணியடி, பிடாரி கோவிலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதிற்கும் 25 வயதிற்கும் உட்பட்ட 9 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து இராணுவச் சீருடைய, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும் தொகையான ஆயுதங்களும் மீட்கப்படுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை முளாய்ப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இச் சம்பவத்தில் அதிகமானவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
மேற்படிச் சம்பவத்தினை அடுத்து வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸ் ஆகியோர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கிய விசேட அறிவுறுத்தலை வழங்கியிருந்தனர்.
இதன் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ரணவீர தலமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலை யாழ்.கொக்குவில் தலையாழிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு இராணுவச் சீருடைகள், ஒரு வாள், 3 கத்தி, 2 சைக்கில்கள் செயின், 3 மோட்டார் சைக்கில் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Average Rating