பீரில் ஆணி… அதிர்ந்த குடி”மகன்”… டாஸ்மாக்குக்கு அபராதம்
திருப்பூர்: டாஸ்மாக்கில் வாங்கிய பீரில் ஆணி கிடந்ததால் பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.
திருப்பூர் மாவட்டம்,அவிநாசிக்கு அருகில் உள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ்.
இவர் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று மங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் பீர் வாங்கினார். அந்த பாரிலேயே அமர்ந்து பாதி பீரை குடித்து முடித்து விட்டு பாட்டிலுக்குள் பார்த்துள்ளார்.
அப்பாட்டிலுக்குள் கிடந்த ஆணியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கடையின் விற்பனையாளரிடம் விசாரித்ததிற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
அதனால் நாகராஜ்க்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற அவர், செலவுக்கான பணத்தை டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்டபோது, அதற்கும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.
இதனால் மன உளைச்சல் அடைந்த நாகராஜ் அதற்கு உரிய இழப்பீடு கோரி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், நாகராஜுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், மண்டல மேலாளர், சம்பந்தப்பட்ட கடையின் நிர்வாகி ஆகியோர் தலா ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Average Rating