அல்ஜீரிய விமான விபத்தில் 78 பேர் பலி! : அபூர்வமாக ஒருவர் மட்டும் காயத்துடன் மீட்பு
அல்ஜீரியாவில் இராணுவ வீரர்களுக்கான போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 78 பேர் பலியாகியுள்ளனர். அபூர்வமாக ஒரே ஒருவர் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று அல்ஜீரியாவின் ஒயும் எல்-போகாய் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. த ஹேர்குலிஸ் சி-130 எனும் விமானவே விபத்துக்குள்ளானது.
வட ஆபிரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக மலையில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துகுள்ளானபோது விமானத்தில் 99 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுமாக மொத்தமாக 103 பேர் பயணித்துள்ளனர்.
இவர்களில் 78 பேர் விபத்தில் பலியாகியுள்ளதுடன் ஒரே ஒருவர் மாத்திரமே காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடும் பனி மற்றும் மலைப்புகுதி என பெரும் சிரமத்துக்கு மத்தியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருவதாக இராணுவ பேச்சாளர் பாரிட் நெசாட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அல்ஜீரி ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த அனைவரும் இராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தாருடன் தொடர்புபட்டவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாளை முதல் 3 நாட்களுக்கு அல்ஜீரியாவின் துக்க தினமாக அந்நாட்டு ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்டப்லிகா பிரகடனப்படுத்தியுள்ளார்.
2003ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 102 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது. இதுவே அங்கு இடம்பெற்ற பாரிய விமான விபத்தாகும்.
Average Rating