கடற்புலிகள் தொடர்பில் பொலீஸ் மாஅதிபர்
நீர்கொழும்பு வத்தளை பமுனுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் கடற்புலி பொறுப்பாளர் சூசையிடம் பயிற்சி பெற்று தாக்குதலுக்கென அவரின் வழிகாட்டலில் அனுப்பப்பட்டவர்கள் என்று பொலீஸ் மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ நேற்றுமாலை பொலீஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். பமுனுகம பிரதேசத்தில் வௌ;வேறு நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கடற்புலிகள் நால்வரும் அதிவிசேட பயிற்சிபெற்றவர்களாவர். பொதுமக்களின் உதவியுடன் வெடிபொருட்கள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை குறித்து தகவல் தந்த சிறுவனும், சிறுமியும் உட்பட ஐவருக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
பமுனுகம சம்பவத்தையடுத்து கற்பிட்டி பகுதியில் 98கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன் மீட்கப்பட்ட படகினை முல்லைத்தீவிலிருந்து நீர்கொழும்பு கடற்பகுதிக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை செய்து புலிகளுக்கு உடந்தையாக இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மீனவர்கள் அறுவர் சி.ஐ.டியினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட அறுவரும் கடற்புலிகளுக்கு உடந்தையாக இருந்து தங்குமிடம், உணவு வழங்கி வந்தவர்களாவர்.
ஏற்கனவே கைதான புலிகள் நால்வர் உட்பட மேலும் பல புலி உறுப்பினர்கள் வெடிபொருட்கள் அடங்கிய மற்றைய படகு சகிதம் மறைந்துள்ளனர். அவர்களை தேடும் பணிகளும் இடம்பெற்று வருகிறது. என்றும் பொலீஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.