என்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் நளினி. முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் வசித்துவரும் தனது வயதான தந்தை சங்கர நாராயணனை அருகில் இருந்து கவனிக்க பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவ்வழக்கு விசாரணையை வருகிற 17–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நளினியின் தந்தை சங்கர நாராயணன் நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அம்பலவாணபுரத்தில் தனது மகன் மனோகரனுடன் வசித்து வருகிறார். தன்னை கவனிக்க நளினி பரோலில் வரத்தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து சங்கரநாராயணன் கூறியதாவது:–
எனது சொந்தஊர் வள்ளியூர் பக்கமுள்ள சங்கனாபுரம். போலீஸ் வேலை கிடைத்து சென்னைக்கு சென்றேன். எக்மோரில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தேன். 1984–ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு மனோகரன், ரவி என்ற மகன்களும் நளினி என்ற மகளும் உள்ளனர்.
நளினி நன்றாக படிப்பாள். கல்லூரி படிக்கும் போது கூடா நட்பு காரணமாக சிக்கலில் மாட்டிக்கொண்டாள். நள்னியை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் என்னிடம் விசாரிக்கவே இல்லை. ஒரு குற்றமும் செய்யாதவளை மாட்டிவிட்டவர் அவர் தான். கைதாகி சிறை சென்றவளை நான் பார்க்க போகவில்லை.
நான்கு வருடத்திற்கு முன்பு தான், ஒரேஒரு தடவை போய் பார்த்தேன் அதுதான் அவளை முதலும், கடைசியுமாக பார்த்தது. அவளின் கைதுக்கு பிறகு மனஉளைச்சலில் இருந்தேன். பின்பு 1994–ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினேன். நான் யார் என்று இங்கு உள்ளவர்களுக்கு தெரியாது.
விலை உயர்ந்த மாடுகளை வாங்கி பால் விற்கும் தொழில் செய்தோம். எங்களின் அடையாளத்தை கூடுமான வரை மறைத்தோம். ஆனால் நளினி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தபிறகு தான், நாங்கள் யார் என்றே இங்கு உள்ளவர்களுக்கு தெரிந்தது. அதுவரை அமைதியாக சென்றுகொண்டிருந்த எங்களது வாழ்க்கை சற்று டென்சனானது.
என்னால் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாது. ஆனால் என் மகன் மனோகரனிடம் அனைவரும் துக்கம் விசாரிக்க தொடங்கியதால் நிம்மதி போனது. என்னை அருகில் இருந்து கவனிக்க அவள் இங்கே பரோலில் வரத்தேவையில்லை. ரிலீசாகி வரட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் அரசு ரிலீஸ் செய்யுமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் அவளை சீக்கரமாக போய் பார்க்கணும். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating