கூட்டணி எப்போது?: பா.ம.க., தே.மு.தி.க. மவுனம் நீடிப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் முனைப்புடன் உள்ளன.
பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் சேர்ந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் இதுவரை எந்த கட்சியும் சேரவில்லை.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் சேரும் என்று நீண்ட நாட்களாகவே தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். இன்னும் 2 நாட்களில் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்பது அவரது சமீபத்திய பேட்டி.
ஆனால், பா.ம.க. இதுவரை பா.ஜனதா கூட்டணியில் போவது குறித்து வாய்திறக்கவில்லை. விரும்பிய தொகுதிகளையும், வேண்டிய எண்ணிக்கைகளையும் பெறுவதற்கான முயற்சியில் பா.ம.க. இறங்கி உள்ளது. தே.மு.தி.க. வராவிட்டால் கூடுதல் தொகுதிகளை பெற முடியும் என்பதற்காக பா.ம.க. இப்போது மவுனமாக உள்ளது.
தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் சேர்க்க பா.ஜனதா எடுத்த முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ் பக்கம் அந்த கட்சி போகுமா? தங்களுடன் சேர்ந்தால் நல்லது என்று தி.மு.க.வின் விருப்பம் நிறைவேறுமா? என்பதற்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. காரணம் தே.மு.தி.க. தொடர்ந்து மவுனமாகவே உள்ளது.
தே.மு.தி.க. எந்த கூட்டணியில் சேரும் என்பது தெரிந்த பிறகே பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க முடியும் என்ற நிலை தொடர்கிறது.
தே.மு.தி.க. எந்த பக்கம் என்பது தெரிந்துவிட்டால் பா.ம.க. உடனே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்துவிடும். தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துவிடும். தமிழக காங்கிரசின் நிலையும் தெரிந்துவிடும். இதற்கான விடையை காண தே.மு.தி.க. எப்போது மவுனத்தை கலைக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
Average Rating