மாணவியை கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் குடும்பம் நடத்திய இளைஞர் கைது
பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவரது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 19 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பை முகுனு வட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார்.
குறித்த மாணவி நீர்கொழும்பு பிரதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பில் கல்வி பயின்று வருவதோடு கடந்த விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மகள் இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்து கொண்ட மாணவியின் தந்தை அது தொடர்பில் தனது மகளைக் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ள மாணவி காதலனை மாதம்பை சுதுவெல்ல பிரதேசத்திற்கு வரவழைத்து அங்கிருந்து அவ்விளைஞனுடன் முச்சக்கர வண்டி ஒன்றில் ஓடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் தனது மகள் காணாமற் போயுள்ளதை அறிந்த மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் தனது மகள் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிட்குட்பட்ட உடுபத்தாவ பிரதேச வீடொன்றில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதோடு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது அங்கிருந்து மாணவியும் அவளது காதலரும் கைது செய்யபட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
தான் தனது காதலருடன் சென்றதிலிருந்து தாம் இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating