உள்நாட்டு கலைஞர்களை புறக்கணிப்பதா? அருங்காட்சியகத்தில் புகுந்து கலைநயமிக்க ஜாடியை உடைத்த ஓவியர்..
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி நகரில் உள்ள பெரீஸ் அருங்காட்சியகத்தில் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள கலைநயமிக்க ஜாடியை ஓவியர் ஒருவர் உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மியாமி பகுதியில் வசித்து வரும் மேக்சிமோ கேமினரோ என்ற 51 வயதான ஓவியர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து சீனக்கலைஞர் அய் வெய்வெயின் ஜாடியை எடுத்துப் பார்த்துவிட்டு, கீழே போட்டு உடைத்துவிட்டார்.
இக்குற்றத்திற்கான காரணம் குறித்து மேக்சிமோவிடம் கேட்டபோது, உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை ஆதரிக்காமல் வெளிநாட்டு கலைஞர்களை அழைத்து வந்து அவர்களின் படைப்புகளை அருங்காட்சியகத்தில் வைத்ததால்தான் அவைகளை உடைத்தாக கூறினார்.
மெக்சிமோ கடந்த 30 வருடங்களாக மேற்கு பாம் கடற்கரையில் தனது படைப்புகளை உருவாக்கி வருகிறார். தனது படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகவே அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இக்குற்றத்தினை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்ட ஜாடியின் மதிப்பு 10 லட்சம் டாலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மியாமியில் 1000 டாலருக்கு மேல் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating