கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்வு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தார்.
இதனால் அந்நாட்டின் உளவு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் அதிலிருந்து தப்பிக்கவேண்டி தற்போது ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம் இவரை இன்று தங்கள் கல்வி நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
கல்லூரியின் மாணவர் குழு ஒன்று இவரை இந்தப் பதவிக்குத் தேர்வு செய்துள்ளது. ஸ்னோடெனின் வக்கீல் மூலமாக அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளதாக அந்த மாணவர் குழு தெரிவித்துள்ளது.
நாங்கள் பயிலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மூலம் குறிப்பிடத்தக்க அறிக்கைகளை வெளியிடுவது இந்தக் கல்லூரியின் பாரம்பரியமாகும்.
எட்வர்ட் ஸ்னோடென் போன்ற தகவல் வெளியிடுபவர்களை அங்கீகரிப்பதன்மூலம் அவர்கள் எங்கிருந்தாலும் நாங்கள் அவர்களுக்குத் துணை நிற்பதைத் தெரிவிக்கின்றோம் என்று அந்த மாணவர் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்தக் கல்லூரியின் தலைவர் என்ற பதவி மாணவர்களின் பிரதிநிதித்துவமாகவே கருதப்படுகின்றது. தலைவர் என்ற முறையில் அவர் கல்லூரியின் நிர்வாகக் குழு மற்றும் பிற அதிகாரிகளுடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குமுன், முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா, இஸ்ரேலின் அணு ஆயுதப்பிரிவு அதிகாரி மோர்டெச்சாய் வனுனு போன்றோர் இந்தப் பதவியில் இருந்துள்ளனர்.
தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராக லிபரல் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் சார்லஸ் கென்னடி பணியாற்றி வருகின்றார்.
இந்த முறை நடைபெற்ற தேர்வில் முன்னாள் சைக்கிள் சாம்பியன் கிரீம் ஓப்ரீ, எழுத்தாளர் ஆலன் பிசட் மற்றும் உள்ளூர் போதகர் ஒருவரைத் தோற்கடித்து எட்வர்ட் ஸ்னோடென் தலைவர் பதவியைப் பிடித்துள்ளார் என்று கல்லூரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating