இலங்கை நாடாளுமன்றத்தில் ஜேவிபி-ததேகூ மோதல்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவின் செயலாளர் விமல் வீரவன்சே, அச்சம்பவத்திற்கு காரணம் விடுதலைப் புலிகளே என்றும், அவர்களை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்றும் பேசினார். அவருடைய உரைக்குப் பிறகு கெப்பிட்டிக்கொல்லாவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தன்பிறகு பேச எழுந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், கஜேந்திரம், அரியநேத்திரன் ஆகியோர், வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
அவையின் மையப் பகுதிக்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறப்பினர்கள், அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இருசாராருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜே.வி.பி. உறுப்பினர்கள் ஜெயந்த விஜயசேகர, ஜெயந்த சமரவீர, திமுது அபேகோன் ஆகியோரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து தமிழர் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் வீசிய புத்தகம் ஒன்று ஜே.வி.பி. உறுப்பினர் மீது விழ, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மற்ற உறுப்பினர் இடைமறித்து இருதரப்பினரையும் தடுத்துப் பிரித்தனர்.
இந்த மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேசையில் இருந்த விளக்கு ஒன்று வெடித்துச் சிதறியது. இக்குழப்பங்களை அடுத்து அவை நடவடிக்கைகளை 30 நிமிடங்களுக்கு தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் லொக்கு பண்டாரா அறிவித்தார்.