மிரட்டல், கப்பம் பெறுதலில் ஈடுபட்டு வருகிறது ஈ.பி.டி.பி!!
இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் அவர்கள் மிரட்டல், கப்பம் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்கா, யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு ஈ.பி. டி.பி வன்முறையில் ஈடுபட்டது எனவும் தனது மனித உரிமை அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் நிலை தொடர்பான அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. இலங்கை அரசின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தலைமையாகக் கொண்ட ஈ.பி.டி.பி போர்க் காலத்தில் இலங்கை அரச படைகளுடன் சேர்ந்தியங்கியது. இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட்டது.
போரின் பின்னரான காலப் பகுதியில் தமது வருமானத்துக்காகவும், தம்மை அந்தப் பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல், மிரட்டிப் பணம் பறித்தல், ஊழல் போன்ற நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி தொடர்புபட்டுள்ளது.
மேலும் ஈ.பி.டி.பியினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆதாரங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 19 ஆம் திகதி இரவு, 20 ஆம் திகதி அதிகாலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் என்று நன்கறியப்பட்ட நபர், இராணுவ உடையில் வந்த நபருடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்தி சசிதரனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த வருடம் மே 6 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தலைமையிலான குழுவினர், ஈ.பி.டி.பி.யினருக்கு எதிரான துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போது, 12 பேர் கொண்ட ஈ.பி.டி.பியினர் அங்கு வந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நெடுந்தீவில் பத்து வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினரின் டி.என்.ஏ மாதிரி சம்பவத்துடன் ஒத்துப்போவதாகவும் அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி யாழ்.நகரில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஊடகங்களிடம், தன்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்க முடியும் என்று தெரிவித்ததையும் அறிக்கையில் அமெரிக்கா கோடிட்டு காட்டியுள்ளது.
Average Rating