கனடாவில் போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை
கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச்(27). மிதமிஞ்சிய போதையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு திருட்டுக் காரை ஓட்டிச்சென்ற இவரை போலீசார் வழி மறித்து தடுத்து நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் போதையில் இருந்த அவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை பிடிப்பதற்காக தாங்கள் வைத்திருந்த நாயை போலீசார் ஏவி விட்ட்னர். ஜெர்மென் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாய் ஆக்ரோஷத்துடன் பால் ஜோசப்பை விரட்டியபடி ஓடியது.
திடீரென்று தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவிய அவர் நாயை வெறித்தனமாக குத்திக் கொன்றார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது, திருட்டுக் காரை ஓட்டி வந்தது, நாயை குத்திக் கொன்றது என தனித்தனியாக 3 வழக்குகளை அவர் மீது தொடுத்தனர்.
இதில் நாயை குத்திக்கொன்ற வழக்கில் பால் ஜோசப் உக்மனிச்சுக்கு 26 மாத சிறை தண்டனை விதித்த நீதிபதி, இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர் எந்த செல்லப் பிராணியையும் வளர்க்க கூடாது எனவும் தடை விதித்துள்ளார்.
Average Rating