மகளை 8 வருட காலமாக துர்நாற்றம் வீசும் வீட்டில் சிறைவைத்த தாய்
பெற்ற மகளை குப்பைகள் நிறைந்த துர்நாற்றம் வீசும் அழுக்கடைந்த குடியிருப்பொன்றில் 8 வருட காலமாக தனது மகளை அடைத்து வைத்திருந்த தாயொருவரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நப்லஸ் நகரைச் சேர்ந்த சியரா என்ற பெண்ணே (36 வயது) இவ்வாறு தனது தாயால் மிக மோசமான சூழ்நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
குறிப்பிட்ட வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அந்த வீட்டில் விசாரணை நடத்த சென்ற போதே மேற்படி பெண் தனது சொந்த தாயாரால் சிறை வைக்கப்பட்டிருக்கும் இரகசியம் அம்பலமாகியுள்ளது.
பொலிஸார் சென்றவேளை வெப்பமூட்டல் வசதியெதுவுமில்லாத அறையில் நிர்வாணக் கோலத்திலிருந்த அந்தப் பெண் கடும் குளிரை தாங்க முடியாது தனது உடலை கேசத்தை உலர்த்தப் பயன்படுத்தும் உபகரணத்தால் உலர்த்திக் கொண்டிருந்துள்ளார்.
அத்துடன் அந்த பெண் போஷணையின்மையால் பெரிதும் நலிவுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணை மோசமான சூழ்நிலையில் அடைத்து வைத்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியையான அவரது தாயாரையும் அத்தையொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து சிறிது தொலைவிலிருந்த சகோதரியின் வீட்டில் வசித்து வந்த தாயார் வாரத்துக்கு இரு தடவைகள் மகள் இருந்த வீட்டிற்கு விஜயம் செய்து மகளுக்குத் தேவையான உணவுகளை அங்கு வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
எனினும், அவர் மகளை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காததுடன் வீட்டை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எதுவும் எடுக்காது இருந்துள்ளார்.
எதற்காக மகள் இவ்வாறு தாயால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
Average Rating