அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் 1500க்கும் அதிகமான மக்கள் புலிகளைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த சமாதானத்தை விரும்பும் மக்கள் ஒன்று திரண்டு, புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டித்தும், புலிகளை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் கோரி, மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரிலுள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு முன்பாக நேற்று காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரையும் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கைகளில் சுலோக அட்டைகளைத் தாங்கி நின்று, தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். புலிகளின் படுகொலைகளையும், பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து கோசம் எழுப்பிய மக்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் முக்கிய பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் புலிகளைத் தடைசெய்து, நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். புலிகளின் நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல். அவுஸ்திரேலிய அரசாங்கம் பயங்கரவாத்துக்கு எதிரான நாடுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும். எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் 1995ம் வருட கிரிமினல் சட்டத்தின் பிரகாரம் புலிகளையும் தடைசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த பட்டியலில் 19 பயங்கரவாத அமைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய சமஸ்டிக் கட்சியின் எம்.பியும் அமைச்சருமான அலன் கிரிவ்பின் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் உரையாற்றியதுடன், புலிகளின் பயங்கதவாதத்துக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பூரண ஆதரவையும் தெரிவித்தார்.
இந்த ஆhப்பாட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, வூலன்கொங்கொ ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.