EPDP கமலிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியே பொறுப்பு- கமலின் சகோதரர்!!
கமலிடம் இருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியினரே பொறுப்பு என கந்தசாமி கமலேந்திரனின் சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொல்லப்பட்டதனை அடுத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து சட்டவிரோத ஆயுதங்களை கமல் வைத்திருந்தமையினால் தமது கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஈ.பி.டி.பியினர் அண்மையில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இது குறித்து கமலின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்,
‘கமலிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனால் அப்படி நடந்திருந்தால் அது கமலின் சொந்தப் பாவனைக்கான ஆயுதமாக இருக்காது. அதற்கு கமல் பொறுப்பாளி அல்ல .அந்த ஆயுதங்களை அவருக்கு வழங்கிய ஈ.பி.டி.பியினரே அதற்கு பொறுப்பாளிகள்.
அந்த ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன? ஏன் அதனை கமலுக்கு வழங்கினார்கள்? என்பதை ஈ.பி.டி.பியிர் தான் தெளிவு படுத்தவேண்டும்.
இனியாவது கமல் கட்சியை காப்பாற்ற நினைக்காமல் உண்மையினைச் சொல்ல முன்வரவேண்டும்.’என்றார்.
இதேவேளை, தம்மிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என கடந்த பல வருடங்களாக ஈ.பி.டி.பியினர் கூறிவந்த நிலையிலேயே கமலிடமும் அவரது மெய்ப்பாதுகாவலரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating