வடமாகாண சபை முதலமைச்சர் பதவி வெறும் வெற்றுப்பெட்டியாகவே உள்ளது; விக்கரமபாகு
வடமாகாண சபை முதலமைச்சர் பதவி என்பது வெறும் வெற்றுப்பெட்டியாகவே உள்ளது. சுதந்திரம் அதிகாரம் என்ற எதுவுமே அற்ற வெற்றுப்பெட்டியாகவே வடமாகாண முதலமைச்சு பதவியை அரசாங்கம் விக்னேஸ்வரனுக்கு வழங்கியுள்ளது என்று நவசமசமாஜ கட்சியின் தலைவரும் மேல்மாகாணசபை தேர்தல் வேட்பாளருமான விக்கரமபாகு கருணாரட்ண குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
வடமாகாண சபை தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக விக்னேஸ்வரனால் மாகாண சபையின் செயலாளரை நியமிப்பதற்கான அதிகாரம் கூட இல்லை. இதனிலிருந்து என்ன தெரிகின்றதென்றால் முதலமைச்சர் என்ற பதவி மட்டுமே அரசாங்கத்தினால் வெற்றுப்பெட்டி போலவே வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ள அதிகாரம் எதுவுமே வழங்கப்படவில்லை.
நாட்டில் சுதந்திரம் உள்ளது, சமத்துவம் உள்ளது என்று வெளிநாடுகளில் பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டு சர்வதிகார ஆட்சியையே அரசாங்கம் நடத்துகின்றது.
எனது அலுவலகம் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். யார் எதற்காக கல்லெறிந்தனர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொலிஸாரினால் கூட எதுவித நம்பகரமான நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இங்கு சர்வதிகார ஏகாதிபத்திய ஆட்சியே நடைபெறுகின்றது.
இந்த நாட்டில் விமல்வீரவங்ச, சம்பிக்க ரணவக்க குணதாச அமரசேகர போன்றோர் இனவாதத்தை பரப்பி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் நடாத்துகின்றனர்.
இன்று இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே அல்ல பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிராகவும் ஜனநாயக விரோத நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்கின்றது.
இந்த நாட்டில் அதிகளவு இனவிரோத அரசாங்கத்தின் அராஜக ஆட்சியினால் தமிழ் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உரிமை கிடைக்க வேண்டும்.
இன்று சர்வதேசம் அரசின் அராஜகத்தினை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கான விலையில் அரசு விரைவில் செலுத்த வேண்டி ஏற்படும். வடபகுதி மக்களும் இந்நாட்டவர்களே. அவர்களது உரிமைகளை அரசாங்கம் வழங்கி நல்வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முனைய வேண்டும்.
மாறாக தொடர்ந்து காணி அபகரிப்பு, இனசுத்திகரிப்பு போன்ற நடவடிக்கை தொடருமானால் அதற்காக பாரிய விலையை அரசாங்கம் செலுத்த வேண்டியிருக்கும் என்றார்.
Average Rating