பணத்துடன் மேலாடையை முதலையிடம் பறிகொடுத்த பண்ணையாளர்..
தனது மேலாடையை கழற்றி வைத்துவிட்டு இயற்கை கடனைக் கழிப்பதற்குச் சென்றபோது, மேலாடையுடன் 4,000 ரூபா பணத்தை முதலையொன்று கௌவி நடுக்குளத்திற்கு கொண்டுசென்ற சம்பவம் திருக்கோவில், சாகாமத்தில் இடம்பெற்றதாக அப்பால் பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார்.
சாகாமம் குளக்கரைக்கு அருகிலுள்ள மாட்டுப் பண்ணையிலுள்ள பசுக்களில் வழமைபோன்று நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை பால் கறந்த பின்னர், பசுக்களை பட்டியிலிருந்து மேய்ச்சலுக்காக திறந்துவிட்டு இயற்கைக் கடனை கழிப்பதற்கு தான் குளக்கரைக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், தனது மேலாடையை அங்குள்ள சிறிய குன்றின் மீது கழற்றி வைத்துவிட்டுச் சென்று இயற்கைக் கடனை முடித்துவிட்டு மீண்டும் குளக்கரைக்கு வந்து பார்த்தபோது அவரது மேலாடையை பெரிய முதலையொன்று குளத்தினுள் கொண்டு செல்வதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
முதலை மனிதரென நினைத்து தனது மேலாடையை இழுத்துச் சென்றதாகவும் பண்ணையாளர் தெரிவித்தார்.
இருப்பினும், இங்குள்ள சிறிய பாறைகளில் கொக்கு உள்ளிட்ட பறவைகள் தங்கியிருப்பது வழக்கமானதென்பதுடன், இப்பறவைகளை முதலைகள் கௌவிச் செல்வது வழமையாகவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Average Rating