யாழ்.தேவியில் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில்,வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையையும் மகனையும் இன்று காலை மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் வந்து கொண்டிருந்த நேரம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினைக் கடக்க முற்பட்ட வேளையிலே இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தவிபத்தில், வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோரே இதன்போது ஸ்தலத்தியே பலியாகியுள்ளனர்.
நெடுங்கேணியில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் மனைவியை ஏ-9 பாதையில் இறக்கிவிட்டு மாற்று வழியினூடாக வவுனியாவை சென்றடையும் நோக்கோடு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating