நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை: பதற்றத்தில் 179 பயணிகள்!
அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது நடு வானில் விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே வீழ்ந்துள்ளது.
இதை அறிந்து கொண்ட விமானி, வெகு சாமர்த்தியமாக விமானத்தை செலுத்தியபடி அட்லாண்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார்.
சம்பவத்தை விளக்கிக் கூறி, தனது விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, ஓடுபாதையை வெறுமைபடுத்தி அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதியளித்தனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுபாதையின் இரு மருங்கிலும் நோயாளர் காவுவாகனங்களையும், தீயணைப்பு வாகனத்தையும் தயார் நிலையில் நிறுத்தி வைத்தனர்.
ஒரு இறக்கையை இழந்து தரையிறங்கிய விமானத்தை இரவு 7.30 மணியளவில் திறமையாக தரையிறக்கிய அந்த விமானி, பயணிகள் இறங்கும் இடத்தில் பத்திரமாக நிறுத்தியதும் விமான நிலைய ஊழியர்கள் பாராட்டியுள்ளனர்.
அவரது சாதுர்யத்தால் 179 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேர் காயங்களின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பறக்கும் போது அந்த விமானத்தின் இறக்கை கழன்று வீழ்ந்தது எப்படி? என்பது தொடர்பாக டெல்டா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating